Tuesday, May 10, 2011

மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்த பில்லிசூனிய பாட்டி…

மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்த பில்லிசூனிய பாட்டி
பார்ப்பதற்கு ரொம்ப நல்ல பாட்டியாகத்தான் தென்பட்டாள். வெள்ளை வெளேரென்று புடவை. நெற்றி நிறைய திருநீறு. கழுத்து கொள்ளாமல் ருத்ராக்ஷ, ஸ்படிக மாலைகள். பெரியவாளை வெகு வினயமாகப் பணிந்து எழுந்தாள்.
பெரியவாள், ஒரு தொண்டரிடம் சமையல்கட்டிலிருந்து நூறு எலுமிச்சம்பழம் கொண்டுவரச் சொன்னார்கள். ஒரு தட்டில் அவைகள் வந்தன.
“அந்தப் பாட்டிகிட்ட குடு”
பாட்டிக்குத் திகைப்பு. பிரசாதம் என்றால், ஓரிரு பழங்கள் போதுமே…. நூறு எதற்கு? ‘எனக்கு ஏன் இத்தனை பழங்கள்?’ என்கிறார் போல் பார்த்தாள் பாட்டி.
“நீ… நிறைய எலுமிச்சம்பழம் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு… துர்தேவதையை ஆவாஹனம் பண்ணி, பல பேர் வீட்டிலே வைத்து, அவர்கள் குடியைக் கெடுக்க வேண்டியிருக்கு.. இந்தப் பழத்தை அள்ளீண்டு போ… உனக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும்…” என்று பொரிந்து தள்ளினார் பெரியவா. அவளோ, தான் ஒரு பில்லி-சூனியக்காரி என்று பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது என்று திடுக்கிட்டுப் போனாள்.
அழுதுகொண்டே நமஸ்காரம் செய்தாள்;  மன்னிப்பு கேட்டாள்.
“உனக்குத் தெரிந்த துர்தேவதை மந்திரங்களை, ஒரு பசு மாட்டின் காதில் சொல்லிவிட்டு, மறந்துவிடு. இனிமேல் பில்லி-சூன்யம் வேண்டாம். அதனால் வருகிற பணமும் வேண்டாம். பகவன் நாமா சொல்லீண்டிரு…”
பின்னர் பாட்டிக்கு விபூதிப் பிரசாதம் மட்டும் கொடுத்தார்.

No comments:

Post a Comment